சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது நண்பர்களை சந்தித்து உரையாடுவதுதிலும் முக்கியமானவர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும் தனது நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட்டு வருகிறார். குறிப்பாக இசைஞானி இளையராஜாவும் சூப்பர்ஸ்டாரும் அடிக்கடி சந்தித்து பேசி பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

அந்தவகையில் இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினியின் வீட்டிற்கு வருகை தந்தார் இளையராஜா. இருவரும் சில மணி நேரம் மனம் விட்டு பேசிய நிலையில் அங்கிருந்து விடைபெற்று கிளம்ப தயாரானார் இளையராஜா.
அப்போது அவரிடம் சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விசாரிக்க, ‘‘என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார்.

‘‘அப்படியா..நானும் அங்கே வருகிறேன்’’ என்று ஆர்வமான சூப்பர்ஸ்டார், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார். ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ரிகர்சல் பணிகளையும், சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த சூப்பர்ஸ்டார், பின்னர், இளையராஜாவிடம் இருந்து விடைபெற்று கிளம்பினார்..