நடிகர் விஜய் தனது முப்பது வருட திரையுலக பயணத்தில் தற்போதுதான் முதன்முறையாக நேரடி தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார். அவரது தமிழ் படங்கள் மூலம் ஏற்கனவே அவருக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ள நிலையில், தற்போது இந்த புதிய முயற்சியை அவர் எடுத்துள்ளார். இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார்.
கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமிழ், தெலுங்கு திரையுலகை சேர்ந்த ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சென்று சந்தித்தார்.. இந்த சந்திப்பின்போது இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கே நேரில் வந்து அவரை சந்தித்து சென்றார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.