தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு பில்டப் கொடுத்து பாடல்கள் இடம் பெறுவது வாடிக்கையான ஒன்றுதான். அதேசமயம் படத்தின் வில்லனுக்கும் இப்படி பில்டப் பாடல் கொடுத்திருக்கிறார்கள் என பார்த்தால் ரொம்பவே அரிதிலும் அரிதாக தான் இருக்கும். அதிலும் கொடூர மனம் கொண்ட ஒரு சைக்கோ என்று பில்டப் பாடல் ஒரு படத்தில் இடம் பெறுகிறது என்றால் அது ஆச்சரியமாகத்தான் இருக்கும். சுந்தர்.சி ஜெய் இணைந்து நடித்துவரும் பட்டாம்பூச்சி படத்தில் அப்படி ஒரு அதிசயம் அரங்கேறி இருக்கிறது.

சுந்தர்.சி கதாநாயகனாகவும் ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் தான் பட்டாம்பூச்சி. பத்ரி வெங்கடேஷ் இயக்கி வரும் இந்த இப்படத்திற்கு நவநீத் சுந்தர் இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது படத்திலிருந்து ஒவ்வொரு பாடலாக வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் பட்டாம்பூச்சி என்கிற முதல் பாடல் வெளியானது தற்போது வேட்டைகள் ஆரம்பம் என்கிற இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை பா.விஜய் எழுதியுள்ளார்

இந்த பாடலில் ஆச்சரியம் என்னவென்றால் படத்தில் சைக்கோ வில்லனான ஜெய்யின் வீர தீர பராக்கிரமங்களை பற்றி குறிப்பிடுவது போல இது எழுதப்பட்டுள்ளது.
யாரோ யாரோ நீ தீய தூதனே என்கிற வரிகளும் கெஞ்சி கேட்டால் கொஞ்சி கொஞ்சி கொன்று தீர்ப்பான் இந்த நல்லவன் என்கிற வரிகளை பார்க்கும்போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.. படம் வரட்டும் பார்க்கலாம்