பொதுவாகவே விஜய் படங்கள் வெளியாகும்போது அதில் இடம்பெற்றுள்ள ஏதோ ஒரு சில காட்சிகளோ அல்லது வசனங்களோ எதிர்பாராத விதமாக சர்ச்சைக்கு உள்ளாவது வழக்கம். குறிப்பாக இயல்பாக ஏதோ வசனங்கள் இடம் பெற்றாலும் கூட, அவர் எதுவும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எதிராக அந்த விஷயங்களை வேண்டுமென்றே செய்தது போலத்தான் விஜய் எதிர்ப்பாளர்கள் பிரச்சினையை கிளப்பி விடுவது வழக்கம்.
இன்று விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள பீஸ்ட் படத்திலும் விஜய் பேசும் ஒரு வசனத்தை அப்படித்தான் திசைதிருப்பி பிரச்சினையை கிளப்ப பலர் நினைத்தனர்.

இந்த படத்தில் இந்தி பேசும் ஒருவரிடம் அடிக்கடி என்னால் இந்தியில் பேசி விளக்கம் சொல்ல முடியாது.. நீ வேண்டுமானால் தமிழ் கற்றுக்கொள் என்று கூறுகிறார் விஜய்..

சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை அனைவரும் கற்போம் என்று கூறியதற்கு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. தமிழை வேண்டுமானால் இணைப்பு மொழியாக மாற்றுங்கள் என்று இங்கிருந்து பதில் குரல் கிளம்பியது.

இந்த நிலையில்தான் பீஸ்ட் படத்தில் இப்படி ஒரு வசனம் இடம் பெற்றிருந்தது மத்திய ஆளும் கட்சியை சேர்ந்த தமிழக அரசியல்வாதிகளிடம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இதை வைத்து விஜய்க்கு எதிராக அரசியல் செய்ய அவர்கள் நினைத்த நிலையில், தமிழக பிஜேபி தலைவரான அண்ணாமலை, இதேபோன்ற வசனத்தை நானே பலமுறை பேசியுள்ளேன்.. எனக்கு அமித்ஷா சொன்ன கருத்தில் உடன்பாடும் இல்லை.. அதே சமயம் அவருடைய கருத்தில் முரண்பாடும் இல்லை என்று கூலாக டீல் செய்து பிரச்சனையே உருவாகாமல் தவிர்த்துவிட்டார்.

படத்தை படமாக பார்த்தால் இது போன்ற பிரச்சினைகளை எழுப்ப தோன்றாது என்பதற்கு ஒரு அரசியல் கட்சித் தலைவராக அண்ணாமலை முன்னுதாரணமாகத் திகழ்கிறார் என்று சொல்லலாம்.




















