V4UMEDIA
HomeNewsKollywoodவில்லனாக நடிக்க தயார் ; எதற்கும் துணிந்த சத்யராஜ்  

வில்லனாக நடிக்க தயார் ; எதற்கும் துணிந்த சத்யராஜ்  

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது..

இந்த நிகழ்வில் சத்யராஜ் பேசும்போது, “ஒரு படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் தன்னுடைய கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதில் பதிய வைக்க ரொம்பவே கஷ்டப்படுவார்.. எனக்கும் அந்த அனுபவம் இருக்கு. இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள வினய்யின் வில்லத்தனத்தை பார்த்தபோது, நானும் இங்கே ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறேன்.. பொருத்தமான வில்லன் கதாபாத்திரம் அமைந்தால் நான் மீண்டும் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன்.. ஏனென்றால் ஒரு தலைமுறைக்கே நான் வில்லன் நடிகர் என்பது தெரியாமல் போய்விட்டது.. அதை மீண்டும் வெளிப்படுத்த தயாராகிவிட்டேன்” என்று கூறியுள்ளார் சத்யராஜ்.

எண்பதுகளில் சினிமாவில் அறிமுகமான சத்யராஜ் ஆரம்பகாலத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார்.. குறிப்பாக ரஜினி, கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தவர், அந்த படங்களில் தொடர்ந்து தனது அழுத்தமான முத்திரையை பதித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து அதன் பின் படிப்படியாக கதாநாயகனாக முன்னேறினார்.

இடையில் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும்படி கூட அவருக்கு அழைப்பு சென்றது. ஆனால் அவர் அதில் அப்போது நடிக்க மறுத்துவிட்டார் இந்த நிலையில் தனது வில்லத்தனத்தை இன்றைய ரசிகர்களுக்கு காட்டுவதற்கு அவர் ஆர்வமாக இருக்கிறார் என்பதை அவரது இந்த அறிவிப்பில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது

Most Popular

Recent Comments