இயக்குனராக ஜொலிக்க முயற்சித்து கண்ணும் கண்ணும், புலிவால் என இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் மாரிமுத்துவை, தமிழ் திரையுலகம் வலுக்காட்டயமாக ஒரு குணச்சித்திர நடிகராக தன்னுள் இழுத்துக்கொண்டு விட்டது என்றே சொல்லாம்.

இன்றைய தேதியில் மோஸ்ட் வான்டட் குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் வலம்வரும் மாரிமுத்து விரைவில் வெளியாக உள்ள விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் அவரது தந்தையாக நடித்துள்ளார்.

இது விஷாலுடன் அவர் இணைந்து நடிக்கும் 5வது படம். மருது படத்தில் விஷாலுக்கு மாமனாராக நடித்த மாரிமுத்து இந்தப்படத்தில் அவருக்கு தந்தையாக புரமோஷன் பெற்றுள்ளார். அதேபோல அட்ராங்கி ரே படத்தில் தனக்கு மகளாக நடித்த டிம்பிள் ஹயாத்திக்கு இந்தப்படத்தில் தனது மருமகளாக புரமோஷனும் கொடுத்துள்ளார் மாரிமுத்து..
‘இந்தப்படத்தின் டிரைலரில் விஷாலிடம் நான் சண்டையை நிறுத்தப் போறதில்லையா? என்று கேட்பெண்.. அதற்கு அவர், அதை என் எதிரிதான் முடிவு பண்ணனும் என்பார். அது வெறும் வசனம் மட்டுமல்ல.. அதுதான் இப்படத்தின் கதையே” என்கிறார் மாரிமுத்து..

இந்தப்படத்தில் விஷாலுடன் பண்புரிந்த அனுபவம் குறித்து மாரிமுத்து கூறும்போது, “விஷாலுடன் இது எனக்கு 5வது படம். மருது-வில் ஆரம்பித்து தொடர்ந்து அவருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். அவர் கடும் உழைப்பாளி. அதையும் விட அவர் மிகப்பெரிய மனிதாபிமானி. படப்பிடிப்பில் இருக்கும் கடைநிலை ஊழியர் வரை யாருடைய மனதும் புண்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்” என கூறி சிலாகிக்கிறார் மாரிமுத்து.

இப்படத்தின் பெயரை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்த இயக்குனர். து.ப.சரவணன், இறுதியாக வீரமே வாகை சூடும் என முடிவு செய்தார்.. டைட்டிலுக்கு ஏற்றபடி விஷாலும் ஆக்சனில் கலக்கி இருக்கிறார். ஒவ்வொரு அடியும் தூள் பறக்கிறது. விஷால் படிப்பிடிப்பு தளத்தில் இப்படத்தின் இரண்டு சண்டைக் காட்சிகளைக் காட்டினார். பார்த்ததும் மிரண்டு போனேன். அந்த அளவுக்கு பட்டையைக் கிளப்பியிருக்கிறார்” என படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கிறார் மாரிமுத்து..