பிரபல ஊடகம் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ திரைப்படம் நிறுத்தப்பட இருப்பதாக வெளியிட்ட செய்திக்கு இயக்குனர் செல்வராகவன் மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ளார்.
பிரபல பத்திரிக்கையான சென்னை டைம்ஸ் செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகயிருக்கும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் நிறுத்தப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தனர்.

“ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட் அதிகமாக உள்ளது. ஏற்கனவே ஆராய்ச்சி மற்றும் படத்தின் முன் தயாரிப்பு பணிகளுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும் போது மேலும் அதிக பணம் செலவாகும் என்பதால் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.” என்று தகவல் தெரிவித்திருந்தனர்.
அந்த செய்தியின் டீவீட்டை மேற்கோள் காட்டிய செல்வராகவன் “அந்த மர்மமான முன் தயாரிப்பு பணியை எப்போது நடைபெற்றது என்று மரியாதையுடன் நீங்கள் எனக்கு சொல்ல முடியுமா? மேலும் அந்த மர்மமான தயாரிப்பாளர் யார்? தயவுசெய்து உங்களுக்கு கிடைத்த தகவலை சரி பாருங்கள்”என்று தெரிவித்துள்ளார். எனவே ஆயிரத்தில் ஒருவன் 2 நிறுத்தப்படவில்லை என்று உறுதியாகியுள்ளது.


























