வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசைமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடித்த ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் வெளியீடு பற்றிய ஒரு குழப்பம் கடந்த ஒரு மாத காலமாக நிலவி வந்தது. அதற்கு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“மாநாடு, படத்தின் இசை உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் வாங்கியுள்ளது. முதல் சிங்கிள் எந்தத் தேதியில் எத்தனை மணிக்கு வெளியாகும் என்பதை புதன்கிழமை லிட்டில் மேஸ்ட்ரோ அறிவிப்பார்,” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த மாதம் ரம்ஜான் பண்டிகையின் போது இந்த முதல் சிங்கிளை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், அப்போது படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவின் அம்மா மரணமடைந்ததால் தள்ளி வைத்தார்கள். அதன்பிறகு எப்போது இந்த சிங்கிள் வெளியாகும் என்று சிம்புவின் ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பும் போது சிங்கிளை வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.
இரு தினங்களுக்கு முன்பு யுவனும் விரைவில் சிங்கிள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனக் கூறியிருந்த நிலையில் தயாரிப்பாளரும் அதிகாரப்பூர்வமாக நாளை அதன் அப்டேட் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளது.