கரூர் : கரூரில் ஊரடங்கு உத்தரவை மீறிச் செல்லும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதுடன், அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசாங் சாய் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலையில் பொதுமக்களை காக்கும் விதமாக, முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இன்று கரூரில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.திருமாநிலையூர், சுங்ககேட், லைட் ஹவுஸ் கார்னர் தான்தோன்றிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசாங் சாய், அப்பொழுது உரிய ஆவணங்கள் இன்றியும், இ-பதிவு இல்லாமல் வாகனங்களில் சென்ற நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தார்.
மேலும் அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் கூட்டநெரிசலில் சிக்கிக்கொண்டது. அப்பொழுது போலீசார் விரைந்து வாகனங்களை நகரச் சொல்லிவிட்டு ஆம்புலன்ஸுக்கு வழி விட்டனர். இந்த ஆய்வில் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் என பலர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.