அஜித்குமார் நடிக்கும் வலிமை படம் குறித்த தகவல்களை தெரிவிக்கும்படி அவரது ரசிகர்கள் அரசியல் தலைவர்களிடமும், கிரிக்கெட் போட்டி நடக்கும் இடங்களிலும் கேட்டு வருகிறார்கள். சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடமும் பேனர் பிடித்தபடி வலிமை பட தகவல்களை கேட்டது வலைத்தளத்தில் பரபரப்பானது. இதையடுத்து நடிகர் அஜித்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“என் மீதும், என் படங்களின் மீதும் அபரிமிதமான அன்பு கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் வலிமை சம்பந்தப்பட்ட ‘அப்டேட்ஸ்’ கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம்மீது உள்ள மரியாதையை கூட்டும்.
இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.