V4UMEDIA
HomeNewsMollywoodபிரபல மலையாள சினிமா நடிகர் அனில் நெடுமங்காடு நீரில் மூழ்கி உயிரிழப்பு

பிரபல மலையாள சினிமா நடிகர் அனில் நெடுமங்காடு நீரில் மூழ்கி உயிரிழப்பு

மலையாள திரையுலக பிரபலங்களின் அடுத்தடுத்த மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மலையாள சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் அனில். இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு என்ற இடத்தை சேர்ந்தவர். நாடக நடிகரான இவர், சுமார் 20 வருடங்களுக்கு முன் ஒரு பிரபல மலையாள தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். இதன் பின்னர் மலையாள சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

கடந்த சில வருடங்களாக இவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக மாறியுள்ளன. பிரித்விராஜ், பிஜு மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய ஐயப்பனும் கோஷியும் என்ற படத்தில் இவர் நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் ஜோஜு ஜார்ஜ் நாயகனாக நடிக்கும் பீஸ் என்ற படத்தில் இவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இடுக்கி மாவட்டம் தொடுபுழா என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த படப்பிடிப்பில் இவர் கலந்து கொண்டார்.

மாலையில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அருகில் உள்ள மலங்கரா அணைக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிய அனில் தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்க முயன்றனர். ஆனால் ஆழமான பகுதி என்பதால் அவரை காப்பாற்றுவதில் முதலில் சிரமம் ஏற்பட்டது.

இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பின் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நடிகர் அனில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தொடுபுழா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம், மலையாள திரைப்பட இயக்குநர் ஷாநவாஸ் உடல்நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அடுத்தடுத்த பிரபலங்களின் மறைவு கேரள திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Most Popular

Recent Comments