அரை டிக்கெட்டில் முழு படம். தியேட்டரில் கொரோனா கால அதிரடி தள்ளுபடி. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் தான் பல நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் புதிய திரைப்படங்கள் மற்றும் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளி வராததால் தியேட்டர்களில் பெரிதாக கூட்டம் வரவில்லை.
50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே பார்வையாளர்கள் வந்து கொண்டிருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பல திரையரங்குகள் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் மின்சாரம் கட்டணம் கட்ட இயலாததால் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ரசிகர்களை திரையரங்குகளுக்கு மீண்டும் வரவழைக்க தியேட்டர் அதிபர்கள் பல்வேறு புதிய சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்.அந்த வகையில் சிறப்பு தள்ளுபடியாக ஒரு தியேட்டரில் பாதி டிக்கெட்டில் முழு படத்தையும் காண்பிக்க முடிவு செய்துள்ளனர். “என் பெயர் ஆனந்தன” என்ற படத்தை பார்க்க தியேட்டருக்கு வரும் பார்வையாளர்கள் அவர்கள் கொடுத்துள்ள ஈமெயிலுக்கு படத்தின் டிக்கெட் புகைப்படம் எடுத்து அனுப்பினால் அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு ஜிபே மூலம் பாதி கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை நவம்பர் 21 முதல் டிசம்பர் 3 வரை மட்டுமே அளிக்கப்படும் என்றும் ஒரு டிக்கெட்டுக்கு ஒருமுறை மட்டுமே பணம் திருப்பி கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.