பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட எடிட்டர் கோலா பாஸ்கர் அவர்கள் இன்று உடல்நல குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக எடிட்டர் கோலா பாஸ்கர் தொண்டை புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஐதராபாத்தில் இன்று காலமானார்.
எடிட்டர் கோலா பாஸ்கர் மறைவை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் குஷி, போக்கிரி, 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை, கேடி, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, கண்டேன் காதலை என பல படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர் கோலா பாஸ்கர்.

தனது மகன் ஹீரோவாக நடித்த ’மாலை நேரத்து மயக்கம்’ என்ற திரைப்படத்தை அவர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தார் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல எடிட்டராக இருந்து வந்த கோலா பாஸ்கரின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு என்று திரையுலகினர் கருத்து கூறி வருகின்றனர்.