சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டதாக அறிக்கை ஒன்று வாட்ஸ் அப், பேஸ்-புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் அதை தான் எழுதவில்லை ஆனால் அதில் உள்ள விஷயங்கள் உண்மை என சூப்பர்ஸ்டார் ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு வேகமாக போட்டி போட்டு கொண்டு தயாராகி வருகின்றன. இந்நிலையில் ரஜினிகாந்த் இன்னமும் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்புகளை வெளியிடாமல் இருப்பது அவரது தொண்டர்கள் மற்றும் தீவிர ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு மட்டுமின்றி வருத்ததில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் ரஜினி வெளியிட்டுள்ளதாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதில் ரஜினி தனக்கு ஏற்கனவே இரண்டு முறை சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது கொரோனா கடின நேரத்தில் கட்சி தொடங்குவது, ஊர் ஊராக சென்று பொதுக்கூட்டம் என சென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது தனக்கு மிகப்பெரும் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்ததால் தன்னால் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை என கூறியிருப்பதாக உள்ளது.
இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ட்விட்டரில் தற்போது விளக்கமளித்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினி ‘என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாக பரவி வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருயினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்துமே உண்மை. இதை பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு விரைவில் அறிவிப்பேன்’ என தெரிவித்துள்ளார்.