நீட் தேர்வு குறித்தும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட, தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் குறித்து நேற்று சூர்யா வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சற்றுமுன் இன்று மதியம் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘ஒன்றிணைவோம் மாணவர்களோடு துணை நிற்போம்’ என்று குறிப்பிட்ட சூர்யா, ‘ஒரு வீட்டில் ஒருத்தர் படித்தால் அந்த வீடு முன்னேறும், ஒவ்வொருத்தரும் படித்தால் நாடு முன்னேறும். பொருளாதார நெருக்கடியால் பாதியில் கல்வியை கைவிட்ட மாணவர்களின் வாழ்க்கையை நாம் நினைத்தால் மாற்றலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமின்றி சமீபத்தில் பாதியில் படிப்பை விட்ட மாணவர்களுக்கான விண்ணப்பத்தை பெற்று வரும் சூர்யா, இதுவரை 3030 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அவை தற்போது ஆய்வு செய்யப்படுவதாகவும், விரைவில் அந்த மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
‘சூரரை போற்று’ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியை அவர் ஏழை மாணவர்கள் மற்றும் கல்வியை பாதியில் கைவிட்ட மாணவர்களுக்காக செலவு செய்யவிருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிணைவோம்… மாணவர்களோடு துணை நிற்போம்…#AgaramCovidEduFund pic.twitter.com/ZTIZN5rQCA— Suriya Sivakumar (@Suriya_offl) September 14, 2020