மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை மீரா மிதுன் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதாக கூறி 2016 -ஆம் ஆண்டு தாங்கள் அவருக்கு வழங்கிய மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை ரத்து செய்வதாகவும், மீரா மிதுன் இந்தப் பட்டத்தை வேறு எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த அமைப்பு கடந்த மே 30 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது..
2016ஆம் வருடத்திற்கான மிஸ் சௌத் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்ற மீரா மிதுனுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடிகை சனம் ஷெட்டி.. தற்போது மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட அந்த பட்டம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள நிலையில், மிஸ் சௌத் இந்தியா-2016க்கான பட்டம் சனம் ஷெட்டிக்கு சென்று சேர்ந்துள்ளது.
இதை போட்டி நடத்தும் அந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் பெற்ற ஒருவருக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகிலேயே ஆச்சர்யமான ஒன்று தான்.
பிக்பாஸ் சீசன்-3யை பார்த்தவர்கள் ஷனம் ஷெட்டி என்ற பெயரை அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். தான் பங்கேற்ற அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிக குறுகிய காலத்தில் தனக்கென ரசிகர்கள் படையை உருவாக்கியவர் ஷனம் ஷெட்டி.
மாடலாகத் தன் பணியைத் தொடங்கிய ஷனம் ஷெட்டி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பலமொழி படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தனக்கென ஒரு பாதையை அமைத்துக்கொள்வதில் உறுதியாக இருக்கிறார். கூடிய விரைவில் அவர் நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சனம் ஷெட்டி பிரபல மாடலாக மட்டும் அல்லாமல், தென்னிந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கதம் கதம், சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சனம் ஷெட்டி.