கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி இரண்டு தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.
திரு. சாமிநாதன் அவர்கள் லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் K.முரளிதரன், G.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, கர்ணன் வருவான், தர்மசக்கரம், பகவதி, பிரியமுடன், உன்னை நினைத்து, உள்ளம் கொள்ளை போகுதே, தோஸ்த், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, , உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத்தேடி, , அன்பே சிவம், கண்களால் கைது செய், ஒரு நாள் ஒரு கனவு, தாஸ், ஒருவன், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, ஆட்டநாயகன், சகலகலா வல்லவன் உட்பட இருபத்தி ஐந்துக்கும் மேல் பிரம்மாண்டமன படங்களை தயாரித்துள்ளார்.
அவரது மரணம் திரைத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அவரது இறப்புக்கு வருத்தம் தெரிவித்தனர். இந்த நிலையில் பிரபல நடிகர் சிம்பு அவரது மரணத்திற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
” தயாரிப்பாளர் திரு. எல் எம். எம் சுவாமி நாதன் எனக்கு மிக நெருக்கமானவர். மென்மையான மனிதர். புத்திசாலி.
எந்த நேரத்தில் யாரை வைத்து என்ன மாதிரி படம் பண்ண வேண்டும் என்பதில் தெளிவானவர்.
நட்புக்கு இலக்கணமானவர். சிலம்பாட்டம் பட களத்தில் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர்.
இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்றது. எனது தேவைகளையறிந்து சகோதரனைப் போல் நடத்தி படப்பிடிப்பையும் முடித்து வந்தார்.
நிறைய நினைவலைகள் உள்ளன. ஆனால் இப்படியொரு சில நாட்களில் விடைபெற்றுச் செல்வாரென தெரியாது.
மருத்துவமனை சென்று பார்த்து ஆறுதல்கூட சொல்லமுடியாத ஒரு நோயோடு போராடியிருக்கிறார் என்பது வேதனைக்குரியது.
அஸ்வின் மற்றும் அசோக் அவர்களுக்கு என்றும், எந்தகாலத்திலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு அமைதியான மனிதனை இழந்திருப்பதில் வருத்தமடைகிறேன்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், சுற்றத்திற்கும், திரையுலகினருக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மரணமடைந்த அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாறட்டும். வேண்டிக் கொள்கிறேன். ” என கூறியுள்ளார்
