புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்த படகோட்டி, பணத்தோட்டம், கலங்கரை விளக்கம், சந்திரோதயம், குடியிருந்த கோயில் மற்றும் சிவாஜி கணேசன் நடித்த பாலும் பழமும், பாதகாணிக்கை, பாகப்பிரிவினை என பல மெகா ஹிட் திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஜி.என் வேலுமணி அவர்களின் பேத்தி புவனா என்பவர் கேரளாவில் இருந்து தன்னையும், தனது தாயாரையும் தமிழகத்திற்கு அழைத்து செல்லவும், குடியிருக்க ஒரு வீடு ஏற்பாடு செய்யும்படியும் நடிகர் ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது
” படகோட்டி, பணத்தோட்டம், கலங்கரை விளக்கம், சந்திரோதயம், குடியிருந்த கோயில், பாலும் பழமும், பாதகாணிக்கை, பாகப்பிரிவினை, பஞ்சவர்ணகிளி, போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்து, புரட்சி தலைவரின், புரட்சி தலைவியின் பெரும் அபிமானம் பெற்றவர் எனது தாத்தா ஜி.என் வேலுமணி என அனைவரும் அறிவார்கள்.
தற்சமயம் நானும், எனது தாயாரும் மிகவும் கஷ்டமான, மோசமான நிலையில் உள்ளோம்.எனது தாயார், 69 வயது ஆகிறது. ரத்த வாதத்தினால் மிகவும் அவதிப்படுகிறார்.ற்சமயம், நாங்கள் கேரளாவில் உள்ளோம். இங்கே எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை.தங்குவதற்கு வீடு இல்லாமல், உண்ண உணவு இல்லாமல், மிகவும் கஷ்டத்தில் உள்ளோம். நானும், எனது தாயாரும், மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் அவதிப்படுகிறோம். எங்களை காப்பாற்றுங்கள்.
நானும் எனது தாயாரும் எங்களது ஊரான கோபிசெட்டிபாளையத்திற்கு செல்லவும், தங்குவதற்கு ஒரு வீடும் பெர உங்களின் உதவியை நாடி இக்கடிதத்தை அனுப்புகிறேன்.ஆந்திரவாசிகளை, இதர தேச வாசிகளை அந்தந்த முதல்வர்களிடம் பேசி சொந்த ஊர் அனுப்பி வைத்தீர்கள் பத்திரிகை ஊடகங்களில் பார்த்தேன்.
கேரளாவில் ஆதரவின்றி தவித்து கொண்டுள்ளோம். தயாரிப்பாளர்கள் வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கிறோம்.நம் முதல்வரிடம் பேசி சொந்த ஊர் அனுப்ப உதவுங்கள். சாப்பாடு கூட இல்லை. நான் பெண்ணாக இருப்பதால் முடியவில்லை.ப்ளீஸ் கேரளாவில் உள்ள எங்களை மீட்கவும். உங்களைத் தவிர எங்களை காப்பாற்று யாரும் இல்லை.
எங்களுக்கு உதவி செய்யுங்கள்.உங்களிடம் கை ஏந்தி மண்டியிட்டு எங்களை காப்பாற்றுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன், எங்களை காப்பாற்றுங்கள் ” என அக்கடிதத்தில் கூறியுள்ளார். இந்த கடிதத்தை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் ராகவா லாரன்ஸ், தமிழக முதல்வர் மற்றும் கேரள முதல்வருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.