புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் தாலுக்கா ஏம்பல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஜூன் 30ம் தேதி காணாமல் போனதாக காவல்நிலையத்தில் அச்சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். ஜூலை 1ம் தேதி அன்று ஊருக்கு அருகில் இருந்த சிறுமியின் உடல் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிறுமியின் பிரேத பரிசோதனையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. சிறுமியின் பக்கத்து வீட்டில் பூ கட்டும் ராஜா என்பவனை கைது செய்தனர். செய்த குற்றத்தை ராஜா ஒப்புக்கொண்ட நிலையில், வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர், சிறுமியின் குடும்பத்தை இன்று நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு மட்டுமின்றி 50 ஆயிரம் ரூபாயை நிதியுதவியாக அளித்தனர். மேலும் இதுபோன்ற இழிவான மிருக்கத்தனம் போன்று ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை அரசு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.


























