சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே சரிசமமாக கவனம் செலுத்தி வருபவர் நடிகர் பிரஜின். சமீபத்தில் ஓணம் பண்டிகை ரிலீசாக மலையாளத்தில் வெளியாகியுள்ள லவ் ஆக்ஷன் ட்ராமா என்கிற படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் பிரஜின்.
இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க நடிகரைத் தேடிக் கொண்டிருந்தபோது இத்தனை வருடங்களாக என்னை மறக்காமல் நினைவு வைத்திருந்த அஜு வர்கீஸ் உடனே கேரளாவிற்கு கிளம்பி வரச்சொன்னார். அங்கே போனதும்தான், இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.
இந்தப்படத்தின் இயக்குநர் தயன் சீனிவாசன் பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான சீனிவாசனின் மகன் அதுமட்டுமல்ல, இயக்குநர் வினீத் சீனிவாசனின் தம்பியும் கூட.. இதுவரை ஹீரோவாக சில படங்களில் நடித்து வந்தவர் இந்த படத்தின் மூலம் டைரக்ஷன் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.. அவரது தந்தை, அண்ணனை போலவே இவருக்கும் நடிப்பு டைரக்சன் என்பது ரத்தத்திலேயே ஊறிப் போய் இருந்ததால் அவர் தற்போது இயக்குநராக மாறியுள்ளார்.
முதல் படம் என்றாலும் நிவின்பாலி நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணி அமைத்து, கிடைத்த முதல் வாய்ப்பில் சிக்ஸர் அடித்துள்ளார். ஒரு சிலர் இப்படி பிரம்மாண்ட கூட்டணி அமையும்போது அந்த வாய்ப்பை கோட்டை விட்ட நிகழ்வுகளும் உண்டு. ஆனால் தயன் சீனிவாசன் கதையையும் அதற்கேற்ற கதாபாத்திரங்களையும் கச்சிதமாக தேர்வு செய்து முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுள்ளார்.
இந்த படத்தின் ஹீரோவான நிவின்பாலி, ஒரு வடக்கன் செல்பி படத்திற்கு பிறகு நீண்ட நாள் கழித்து இப்படி ஒரு ஜாலியான படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில், தான் ஒரு முன்னணி ஹீரோ என்றாலும் அதற்கான எந்தவித ஒரு பந்தாவும் இல்லாமல் மிக இயல்பாக பழகினார். தமிழில் இருந்து வரும் நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு தரவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அதேபோல நயன்தாரா உடன் இந்தப்படத்தில் இரண்டு காட்சிகளில் இணைந்து நடித்துள்ளேன். ஒரு காட்சியில் அவரை எதிர்த்துப் பேசுவது போல வசனம் பேசியிருந்தேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அது படத்தில் இடம்பெறவில்லை.
இந்த படத்தை பார்த்தவர்கள் மலையாளத்தில் ஒரு முக்கியமான படத்தில் வில்லனாக நடித்திருப்பது கண்டு ஆச்சரியப்பட்டு பாராட்டினார்கள். முக்கியமாக எனது நடிப்பைப் பாராட்டி அஜூ வர்க்கீஸ் காஸ்ட்லியான TAGHUER வாட்ச் ஒன்றை பரிசளித்தார். கேரளாவின் மிகப்பெரிய விருதைப் பெற்றதுபோல் உணர்ந்தேன். பொதுவாக ஒரு மிகப்பெரிய படத்தில் வில்லனாக நடிக்கும்போது அதில் மிகப்பெரிய ரீச் கிடைக்கும். அதுமட்டுமல்ல ஒரு நடிகருக்கு எல்லா மொழிகளிலும் நடிப்பது ரொம்பவே முக்கியம்.. அப்போது தான் மற்ற மொழிகளில் இருந்தும் நம்மை தேடி வாய்ப்புகள் வரும்..