
தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் தமிழில் வெளி வர இருக்கும் திரைப்படம் ‘சாஹோ’. நடிகர் பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து சுஜீத் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘சாஹோ’. இந்த பல மொழி அதிரடி திரில்லரில் நடிகர்கள் அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராஃப், சங்கி பாண்டே மற்றும் பலர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
சாஹோ ஒளிப்பதிவை மதியும், ஸ்ரீகர் பிரசாத் படத்தின் எடிட்டிங்கையும் கையாண்டுள்ளார். யூ.வி கிரியேஷன்ஸ் வம்சி கிருஷ்ண ரெட்டி, பிரமோத் உப்பலபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

நேற்று சென்னையில் இந்தப் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாஸ் ஷ்ரத்தா கபூர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில், தொகுப்பாளர் கேட்ட அணைத்து கேள்விகளுக்கும் பிரபாஸ் தமிழில் பதிலளித்து அனைவரையும் ஈர்த்தார். மேலும் தமிழ் படங்களில் நடிக்க விருப்பம் என்றும் அவர் கூறியிருந்தார். தொகுப்பாளர், “பாகுபலி தமிழிலும் வெளியானதே?” என வினவியபோது, “இருப்பினும் அது நேரடி தமிழ் படம் இல்லை” என்று பதிலளித்தார். மேலும் இவர் தமிழில் பேசியது தேலுங்கு ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகிறது.