
எத்தனையோ மேதைகளை கொண்டது தமிழ் திரையுலகம், இன்று எத்தனையோ இழப்புகளை பார்த்துவிட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி என தொடங்கி திரையுலகம் இழந்தது எண்ணற்ற கலைஞர்கள். இவர்கள் காட்டி சென்ற பாதை இன்று பல கலைஞர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது. அந்த வகையில் தமிழ் திரையுலக வரலாற்றில் தொட்டது எல்லாம் துலங்க செய்த ஒரு மாமனிதர் பஞ்சு அருணாச்சலம் நினைவு நாள் தான் இன்று. எழுத்தாளர், இயங்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முக ஆற்றல்களை படைத்தவர். இவரின் மரணம் எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு.
முரட்டுகாளையில் ஜெய்ஷ்ங்கர்
ஏவிஎம் அப்போது ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு சூப்பர் ஸ்டார் அவர்களை வைத்து ‘முரட்டுக்காளை’ படம் எடுக்க முடிவு செய்தனர். யார் வில்லனாக நடித்தால் பொருந்தும் என நினைக்கும் போது நடிகர் ஜெய் ஷங்கர் நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும், புதுசாக இருக்கும் என்று…. யூகித்து கூறினார்.
சகலகலா வல்லவன்
ஏவிஎம் தயாரிப்பில் உலகநாயகன் படத்திற்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என அனைவரும் யோசிக்கும் போது, கதைக்கும் கதாநாயகனுக்கு ஏற்ப ‘சகலகலா வல்லவன்’ என உடனடியாக அனைவரும் வியக்கும் வண்ணமும் குறை கூற இயலாத அளவிற்கு தலைப்பு கொடுத்தார்.
‘என்னம்மா கண்ணு’
நடிகர் சத்யராஜ் அவர்கள் ஒரு காலத்தில் ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் நடித்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது கதாநாயகர்களின் வசங்களில் ஒரு பஞ்ச் அல்லது அவர்களுக்கு அடையாளம் ஏற்படுத்தும் வரிகள் என வசனத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்பு இருக்கும். எழுத்தாளருக்கு தெரியாத வார்த்தைகள் இருக்காது. இவர் மிகவும் நடைமுறை வார்த்தைகளை வைத்து ‘என்னம்மா கண்ணு’ என்று கூறிய அந்த வசனம், இன்று வரை நடிகர் சத்யராஜ் அவர்களை அடையாளம் சொல்லும் ஒரு வசனம்.
‘அபூர்வ சகோதரர்கள்’, ‘ஹேராம்’
உலகநாயகன் ‘அபூர்வ ரகங்கள்’ படம் எடுத்து முடித்த பிறகு. பஞ்சு அருணாச்சலம் அவர்களிடம் போட்டு காண்பித்தார். அவர் திருத்திய சில இடங்களுக்கு பிறகு அந்த படத்தை பார்த்த கமல்ஹாசன் அவர்களுக்கு அப்போது தான் படத்தின் மீது ஒரு திருப்தி ஏற்பட்டது. ‘ஹேராம்’ படத்தை 4 மணி நேரம் எடுத்திருந்தார் உலகநாயகன், அனால் அதை மூன்று மணிநேரமாக குறைத்து மட்டுமின்றி படத்தின் சுவாரஸ்யத்தை அதே அளவில் தக்கவைத்தவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல எண்ணற்ற சம்பவங்கள், இவர் திரையில் எளிதில் நுழையவில்லை. பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், கவியரசர் கண்ணதாசன் இருவரும் இவருக்கு சித்தப்பா முறை உறவானவர்கள். சென்னைக்கு வேலை தேடி பெரிய சித்தப்பாவிடம் சென்று தனக்கு ஒரு வேலை வேண்டும் என கூறும்போது, ‘பரணி ஸ்டுடியோவில் வேலை பார்த்து பழகிக்கொள்’ என கூறினார். பின்னர் ‘கண்ணதாசன்’ அவர்களிடம் வேலை கேட்கும்போது அவரது எழுத்தாற்றலை புரிந்த கண்ணதாசன் அவர்கள் தான் நடத்திக் கொண்டிருந்த ‘தென்றல்’ பத்திரிகைக்கும் உதவியாளராக வைத்துக்கொண்டார்.
முதல் அறிமுகம்
1960ஆம் ஆண்டு ‘நானும் மனிதன்தான்’ படம் மூலம் முதன் முதலாக பாடல் எழுதி அறிமுகமானார். 1962 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சாரதா’ படத்தில் அவர் எழுதி இடம் பெற்ற ‘மணமகளே மருமகளே வாவா, உனது வலது காலை எடுத்து வைத்து வாவா’ பாடல் அவரைப் பிரபலமடைய செய்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர் காலகட்டங்களில் தன்னை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தி, தனக்கென்ன ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன், முன்னணிக் கலைஞர்களாக வெற்றிவலம் வந்த போது சிறந்த திரைக்கதை, வசனகர்த்தா என இவர் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த காலம் அது. கமர்ஷியல் படங்களுக்கு உயிர் தந்தவர், முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன் நடித்த பிரம்மாண்டமான கமர்ஷியல் படங்கள் திரையுலகம் காணாத வெற்றியடைய இவருடைய ஐடியாக்களும் ஒரு காரணம். ஜெய்சங்கர், முத்துராமன், சிவக்குமார், விஜயகாந்த் படங்களின் வெற்றிக்கு இவரே ஒரு முக்கிய காரணம்.
இவரின் படங்கள்
‘முரட்டுக்காளை’, ‘போக்கிரிராஜா’, ‘பாயும்புலி’, ‘சகலகலா வல்லவன்’, ‘மனிதன்’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘உயர்ந்த உள்ளம்’, ‘ராஜா சின்ன ரோஜா’ போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
‘ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘கல்யாணராமன்’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘ஜப்பானில் கல்யாணராமன்’, ‘ஆனந்த ராகம்’, ‘மைக்கேல் மதனகாமராஜன்’, ‘வீரா’, ‘ராசுக்குட்டி’, ‘அலெக்சாண்டர்’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘குருசிஷ்யன்’, ‘ரிஷி’ போன்ற 40 க்கு மேற்பட்ட படங்களை தயாரித்திருக்கிறார்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ‘கவரிமான்’, ‘ஆளுக்கொரு ஆசை’, ‘காற்றினிலே வரும் கீதம்’, ‘சக்கைப்போடு போடு ராஜா’, ‘வாழநினைத்தால் வாழலாம்’, ‘காயத்ரி’, ‘உறவு சொல்ல ஒருவன்’, ‘உன்னைத்தான் தம்பி’, ‘கல்யாணமாம் கல்யாணம்’, ‘உங்கள் விருப்பம்’, ‘கடல்மீன்கள்’, ‘எங்கம்மா சபதம்’, இது எப்படி இருக்கு’, ‘பிரியா’, ‘உறவாடும் நெஞ்சம்’, ‘பேர் சொல்ல ஒரு பிள்ளை’, ‘காலங்களில் அவள்வசந்தம்’, ‘அவர் எனக்கே சொந்தம்’, ‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’, ருசிகண்ட பூனை’, ‘ஹலோ பார்ட்னர்’, ‘கழுகு’, ‘உல்லாசப் பறவைகள்’, உள்பட 99 படங்களுக்கு திரைக்கதை, வசனமெழுதி வெற்றிக்கும் உறுதுணையாக இருந்திருக்கிறார்.
இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் நடித்த சாரதா படத்தில் ‘மணமகளே மருமகளே வாவா’, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘கலங்கரை விளக்கம்’ படத்தில் ‘பொன்னெழில் பூத்தது புதுவானில் வெண்பனிதுவிடும் நிலவேநில்’, மு.க.முத்து நடித்த ‘பூக்காரி’ படத்தில் ‘காதலின் பொன் வீதியில்,’ ‘அவர் எனக்கே சொந்தம்’ படத்தில் ‘தேவன் திருச்சபை மலர்களே’, ‘கவிக்குயில்’ படத்தில் ‘சின்னகண்ணன் அழைக்கிறான்’, ‘குயிலேகவிக்குயிலே’, ‘அன்னனக்கிளி’ படத்தில் அனைத்துப் பாடல்களும், ‘காயத்ரி’ படத்தில் ‘வாழ்வே மாயமாம்…’, ‘எங்கம்மா சபதம்’ படத்தில் ‘அன்புமேகமே இங்கு ஓடிவா’, ‘உறவாடும் நெஞ்சம்’ படத்தில் ‘ஒரு நாள்உன்னோடு ஒருநாள்’, ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் ‘காதலின் தீபம் ஒன்று’, ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படத்தில் ‘கண்மணியேகாதல் என்பது’, ‘காற்றினில் வரும் கீதம்’ படத்தில் ‘ஒரு வானவில்போலே’, போன்ற 500க்கு மேற்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார். ‘மணமகளேவா’, ‘புதுபாட்டு’, ‘கலிகாலம்’, ‘தம்பி பொண்டாட்டி’, போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.
விருதுகள்
இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்தது. இவர் தயாரித்த ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, போன்ற படங்களுக்கு பல விருதுகள் கிடைத்தது. எழுத்தாளரான இவர் சிறந்த திரைக்கதை, வசனத்திற்காக பல விருதுகள் பெற்றியிருக்கிறார். கதாசிரியர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர், விநியோகஸ்தர் இப்படி பஞ்சு அருணாச்சாலம் அவர்கள் சினிமாவில் பல துறைகளில் வெற்றி களம் கண்டுள்ளார்.
எழுத்தாளரின் பேனாக்களுக்கு ஓய்வு ஒன்று இல்லை என்பது உலகறிந்த உண்மை. பேனாக்களும் ஒரு காலத்தில் ஓய்ந்து விட்டு ஓய்வு எடுத்து விடும், ஆனால் அந்த எழுத்தாளனின் வரிகளுக்கு ஓய்வு என்பது நிரந்தரமாக இல்லை. இவரின் அறிமுகம் பேனாவிலிருந்தும் இவரின் மூலம் உதிர்ந்த வார்த்தைகளால் ஆரம்பமானது, பின் அதுவே இவரது திரைக்கதை, வசனங்களாக மாறியது, அதன் தோயற்சியாக இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என இவர் சினிமாவில் உள்ள அதனை துறைகளிலும் கால் பதித்தார்.
சாதனைகள் பல செய்தினும் இவர் என்றும் எளிமையின் சிகரமாக மட்டுமே திகழ்ந்து நின்றார். வற்றாத கற்பனை கடலான இவர் சினிமாவை பற்றியும் சினிமா ரசிகர்களை பற்றியும் நன்றாக தெரிந்து வைத்து இருந்தார். இவரின் முன் திரையிடப்படும் ஒரு படத்தில் இருக்கும் சிறு சிறு தவறுகள் முதல் அனைத்தும் இவரால் தீர்க்கப்பட்டு, பின் அந்த படங்கள் திரையிடும் போது அது வரலாறு காணாத சாதனைகளை படைத்தது செல்லும்.


























